வரதராஜ பெருமாளுக்கு வருமா சம்மன்?: கருணாநிதி
சென்னை:
சங்கரராமன் கொலைக்கு வரதராஜப் பெருமாளே சாட்சி என்று எஸ்.பி. பிரேம்குமார் கூறியிருப்பதைப் பார்த்தால் சாட்சி சொல்ல வருமாறுவரதராஜப் பெருமாளுக்கு சம்மன் போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி நக்கலாகக் கூறியுள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, வரதராஜப் பெருமாள் சன்னதியில் வைத்துப் பூஜை செய்த பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சங்கர மட பக்தர்களுக்கு தான் ஒன்றும் சளைத்தவர் அல்ல என்பதை எஸ்.பி. பிரேம்குமார்நிரூபித்துள்ளார்.
சங்கரராமன் கொலைக்கு வரதராஜப் பெருமாள்தான் சாட்சி, இந்த வழக்கே பெருமாளுக்கும்,
சங்கராச்சாரியார்களுக்கும் இடையே நடப்பதுதான் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார்.
அவரது கூற்றில் பக்தி ரசம் சொட்டினாலும் கூட சாதாரண பாமரனுக்கு ஏற்படுகின்ற
சந்தேகத்திற்கு என்ன பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை.
சங்கரராமன் கொல்லப்பட்ட காட்சியை நேரில் பார்த்த பெருமாளுடன் சேர்ந்து அந்தக் கொலையை ஏன் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாது?அப்படி தடுத்து நிறுத்த முடியாவிட்டால் ஏன் அப்படிச் செய்யவில்லை என்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்குமே?
சங்கரராமன் கொலையை நேரில் பார்த்த வரதராஜப் பெருமாளுக்கு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல
வருமாறு சம்மன் போகுமா என்பதையும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.