விஜயேந்திரர் ஜாமீன் மனு மீது 27ல் தீர்ப்பு
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரின் ஜாமீன் மனு மீது நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, சுந்தரேச அய்யர் ஆகிய மூவரும் பேரும்தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு வாய்தா கேட்டது. இதற்கு நீதிபதி அக்பர் அலி கடும் கண்டனம்தெரிவித்தார். வரும் 25ம் தேதிக்கு (இன்று) வழக்கை ஒத்திவைப்பதாகவும், அதற்கு மேலும் வாய்தா கேட்கக் கூடாது என்றும் அவர்கண்டிப்புடன் தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது இளையவர் சார்பில் வழக்கறிஞர் லட்சுமண ரெட்டி ஆஜராகிவாதாடினார்.
ரெட்டி பேசுகையில், இந்த வழக்கில் விஜயேந்திரர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. மடத்தின் நிர்வாகம், வரவு-செலவில் அவர்தலையிடுவதே இல்லை. பூஜைகளில் மட்டுமே அவர் பங்கேற்பார். ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 லட்சத்தை எடுத்துகொலையாளிக்குத் தந்ததாக போலீசார் கூறுவது ஆதாரமே இல்லாம முழுப் பொய்.
உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோதே பணம் கை மாறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.எனவே போலீசாரின் குற்றச்சாட்டுகளை ஒதுக்கி இளையவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
ரகுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன் பேசுகையில்,
சங்கர மடத்தில் ஏராளமானவர்கள் தங்கி சமஸ்கிருதம் படித்து வருகின்றனர்.ரகுவும் அப்படி சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் தான். மடத்தின்நிர்வாகத்தில் அவர் தலையிட்டதில்லை. வரவு-செலவில் அவர் குறுக்கிடவே முடியாது. அவர் மீதான குற்றம் தவறானது, பொய்யானது.அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
சுந்தரேச அய்யர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திர சேகர் பேசுகையில், அய்யர் மிகவும் வயதானவர். மடத்தில் நடக்கும் எந்தஉரையாடல்களிலும் அவர் பங்கேற்பதில்லை. இதுவரை வாக்குமூலம் தந்த எந்தக் குற்றவாளியும் அய்யர் மீது எந்த புகாரும்சொல்லவில்லை. இதனால் அவரை விடுவிக்க வேண்டும் என்றார்.
இந்த வாதங்களுக்குப் பதிலளித்து அரசு வழக்கறிஞர் துரைசாமி பேசுகையில்,
விஜயேந்திரர், ரகு, அய்யர் முவருக்கும் சங்கரராமன் கொலையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. கொலைக்காக வாய்மொழியாகபேசினாலும் கூட அது கொலைக்குச் சமம். எனவே இவர்களுக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்பர் அலி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் வியாழக்கிழமை (27ம் தேதி)வழங்குவதாக அறிவித்தார்.
ஜாமீன் கோரியுள்ள ரகு மற்றும் சுந்தரேச அய்யர் இருவரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் ஒரு வருடத்திற்கு விடுதலை ஆக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சுந்தரேச அய்யர், கதிரவன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுமீதான விசாரணை சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்று விசாரணை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.