தமிழகத்தில் எளிமையான குடியரசு தினம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியேற்றி வைத்து முப்படையினர்,காவல்துறையினர், என்.சி.சி., சாரணர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா அண்ணா வீர பதக்கம், காந்தி விருது, கோட்டை அமீர் விருது ஆகியவற்றை வழங்கினார்.
திருட்டு மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட 3 தாசில்தார்களுக்கும் வீர தீரச் செயலுக்கான அண்ணா வீரப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொல்லப்பட்ட தாசில்தார்களின் குடும்பத்தினரிடம் அண்ணா தங்கப் பதக்கம், ரூ. 10,000 ரொக்கப் பரிசுஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார்.
அதே போல திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாசில்தாராகப் பணியாற்றி மணல் திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏறியதால், இருகால்களும் நசுக்கப்பட்டு, சக்கர நாற்காலியுடன் பணியாற்றி வரும் நடராஜனுக்கும் அண்ணா வீரப் பதக்கத்தை ஜெயலலிதா வழங்கினார்.
மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பழனியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீதுக்கு வழங்கப்பட்டது.
கள்ளச் சாராயத்தை ஒழித்த செங்கை கிழக்கு மாவட்ட கூடுதல் எஸ்பி செந்தில்குமாரி, விழுப்புரம் கூடுதல் எஸ்பி லட்சுமி, கோவை டிஎஸ்பிநந்தகுமார், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுசில்குமார் ஆகியோருக்கு மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.
ஜெயலலிதா, ஆளுநர் பங்கேற்ற விழா 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. இதே போல மாநிலம் முழுவதும் நடந்த எளிமையானவிழாக்களில் மாவட்டத் தலைநகர்களில் ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்தனர்.
குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.