விஜயேந்திரர், ரகு ஜாமீன் மனு தள்ளுபடி!!
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டுசெஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, சங்கர மட முன்னாள்மேலாளர் சுந்தரேச அய்யர், போலி குற்றவாளிகளான ஆறுமுகம், செந்தில்குமார் ஆகியோர் செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி அக்பர் அலி தனது தீர்ப்பை வழங்கினார்.
நீதிபதியின் தீர்ப்பு விவரம்:
விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்கள். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளைகலைப்பார்கள் என்ற அரசுத் தரப்பு வாதத்தை நிராகரித்து விட முடியாது.
மேலும் இதுபோன்ற முந்தைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. எனவே விஜயேந்திரர், ரகு,சுந்தரசே அய்யர், ஆறுமுகம், செந்தில்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றார் நீதிபதி.