ஆடிட்டர்: பிப். 4 வரை விஜயேந்திரரை கைது செய்ய தடை
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி விஜயேந்திரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைசென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
அதுவரை விஜயேந்திரரை போலீஸார் இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜயேந்திரர், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்துரைசாமி, இந்த வழக்கில் இறுதி அறிக்கை அடுத்த வாரம் தாக்கலாகிறது. அதுவரை இந்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்று கோரினார்.
விஜயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதுவரை தனது கட்சிக்காரரை போலீஸார் கைது செய்யக் கூடாது என்று கூறினார்.
பின்னர், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படும் வரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவைமேற்கோள் காட்டிய நீதிபதி தணிகாச்சலம், விஜயேந்திரரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்குஒத்திவைத்தார்.
அதுவரை அவரை இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.