நிவாரண நிதி: ஜெவுக்கு ப.சி. பளிச் பதில்
சிவகங்கை:
வங்கிகள் மூலமாகவே நிவாரண நிதியை வழங்குவது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவில் எந்த மாற்றமுமில்லை என்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி சுனாமி நிவாரண கடனுதவி என்ற புதிய திட்டத்தின் வாயிலாக வங்கிகள் மூலம் மீனவர்களுக்கு நேரடியாக கடன்வழங்கப்படும் என்று ப.சிதம்பரம் அறிவித்திருப்பது மாநில அரசின் உரிமைகளை மீறிய செயல் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர்மன்மோகன் சிங்குக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ப.சிதம்பரம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா எனக்கு கடிதம் எழுதவில்லை. பிரதமருக்குத்தான் எழுதியுள்ளார். அவர் அதற்கு பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் மீனவர்களுக்கு மட்டும் ரூ.2,731 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும்ரூ.2,260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.32,000 மாநில அரசுகள் மூலமாகவேவழங்கப்படவிருக்கிறது.
இயந்திரப் படகுகள் மற்றும் பைபர் கிளாஸ் படகுகள் வாங்க மத்திய அரசு 35 சதவீதம் மானியத்துடன் கடன் தருவதால் அதுதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே வழங்கப்படும். இந்தக் கடன் தொகையை ஒன்றரை வருடத்திற்குப் பிறகே திருப்பிச் செலுத்தவேண்டும்.
காலம் தவறாமல் கடன் தொகையை செலுத்தி வந்தால் 2 சதவீத தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கணக்குகளை எல்லாம் யார்பராமரிப்பது? நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே பணிகள்நடைபெறும். இதற்கிடையே மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும்.
மீனவர்களுக்கு 48 மணி நேரத்தில் நிச்சயமாக கடன் உதவி வழங்கப்படும்.
அனைத்து மாநில அரசுகளும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பட்டியலை அனுப்பியுள்ளன. தமிழக நிதியமைச்சர் பொன்னையன் அத்தகையபட்டியல் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அந்த பட்டியலின் அடிப்படையில் வங்கிக் கடன் வழங்கப்படும். இதற்கு முன் மத்திய அரசு வழங்கிய பல்வேறு கடனுதவித் திட்டங்களும்வங்கிகள் மூலமாகவே வழங்கப்பட்டன.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி எந்த வரையறையும் கிடையாது. மாநில அரசுகளின் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள்இப்போது கூட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு உதவவும் மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. அவர்கள்அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தங்களது பெயர், அந்தமானில் அவர்கள் தங்கியிருந்த முகவரி, எப்போது தமிழகம்வந்தார்கள், எத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் ஆகிய தகவல்களை அளித்தால் மத்திய அரசு அவர்களுக்கு உதவும் என்றார்.












Click it and Unblock the Notifications