தமிழகத்தில் மர்மக் கொலைகள்: வைகோ புகார்
காஞ்சிபுரம்:
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தமிழகம் வந்தபோது திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் சென்றது குறையல்ல,அடுத்த முறை வரும்போது நிச்சயம் சந்திப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சப்பைகட்டு கட்டினார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
மதிமுகவை வலுப்படுத்த மாவட்டம்தோறும் நேரில் சென்று 3 நாட்கள் ஆய்வு நடத்தி வருகிறேன். காஞ்சிபுரம் 14வது மாவட்டமாகும்.தொண்டர்களுடன் நேரிடையாகப் பேசும் அரிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வேடசந்தூரில் அடுத்த மாதம் 5,6 ஆகிய தேதிகளில்மதிமுக விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதற்கு கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த மாநாட்டில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரியன் ரஞ்ஜன்தாஸ் முன்சி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தமிழககாங்கிரஸ் தலைவர் வாசன், பாமக தலைவர் ஜி.கே. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட்கட்சி எம்.பி. மோகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கட்சி சாராத 15,000 விவசாயிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மார்ச் 8ல் மதிமுக மகளிர் மாநாடு நடைபெறுகிறது. விரைவில்நெசவாளர்கள் மாநாடும் நடத்தப்படும்.
சரத் பவார் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் விருந்துண்டதால் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் வராது. மத்திய அமைச்சர் என்ற முறையில்மாநில முதல்வரைச் சந்தித்து மத்திய அரசு நிதி குறித்து பேசியிருக்கிறார். அப்போது நண்பகல் விருந்து உண்டிருக்கிறார். அவர் கட்சியின்பிரதிநிதி அல்ல.
சரத் பவார் தேர்ந்த அரசியல்வாதி, மராட்டிய சிங்கம். எனது நண்பர். அவருக்கு தமிழகத்தின் அரசியல் நிலைமை தெரியும். இங்குகூட்டணியில் தலையிடும் எண்ணம் கடுகளவும் அவருக்குக் கிடையாது.
சரத் பவார் கருணாநிதியை சந்திக்காமல் சென்றது குறையல்ல. அடுத்த முறை வரும்போது நிச்சயம் சந்திப்பார்.
பாமக நிறுவனர் ராமதாசுடன் திருமாவளவன் கூட்டணி சேர்ந்திருப்பது திமுக கூட்டணியில் பிரச்சினை ஏற்படுத்தாது. கூட்டணியில் புதியகட்சிகளை சேர்ப்பது குறித்து கருணாநிதிதான் முடிவு செய்வார். சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.
சுனாமி நிவாரணப் பணிகளில் அதிமுக தலையிடுகிறது. அனைத்துக்கட்சி பிரமுகர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்என்று கோரி வருகிறோம். ஆனால் ஜெயலலிதா அதை செய்யவில்லை. சுனாமி நிதியை தனது கட்சிக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்.
ஜெயலலிதாவின் பையனூர் பங்களாவில் கொள்ளை நடந்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது. இங்குசட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது. பகல் நேரத்திலேயே பெண்கள் நடமாட முடியவில்லை. மர்மமான முறையில் கொலைகள்நடக்கின்றன.
ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானதும் விஜயேந்திரரைக் கைது செய்தது, அவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்படும் என்று கூறப்படுவதுஅரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம்பெறாது. கட்சிப் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது கரவொலிஅடங்க 10 நிமிடமானது என்று வைகோ கூறினார்.