நேபாள மன்னருக்கு இந்தியா, யுஎஸ் கண்டனம்
காத்மாண்டு:
நேபாளத்தில் 10 உறுப்பினர்கள் கொண்ட புதிய அமைச்சரவையை அந் நாட்டு மன்னர் ஞானேந்திரா நியமித்துள்ளார்.
பிரதமர் ஷேர் பகதூர் துபா தலைமையிலான நேபாள நாட்டு அரசை ஞானேந்திரா திடீரென நேற்று கலைத்தார். நாட்டில் அவசர நிலையைபிரகடனப்படுத்தியதோடு, முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் புதிய அரசுக்குத் தானே தலைமையேற்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந் நிலையில் இன்று காலை தொலைக்காட்சியிலும்,வானொலியிலும் 10 உறுப்பினர்கள் கொண்ட புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியானது.
புதிய அமைச்சரவையில் ரமேஷ்நாத் பாண்டே வெளியுறவுத் துறை அமைச்சராகவும், கம்யூனிஸ்ட் உறுப்பினரான ராதாகிருஷ்ணாமைனாலி விளையாட்டு மற்றும் கல்வித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பர்வதார் ஷம்ஷெர் ராணா நிதியமைச்சராகவும், டான் பகதூர் ஷாஹி உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துபாவின் அரசு கலைக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சியோடு ஜனநாயகமும் தழைக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சர்னா தெரிவித்தார்.
இதற்கிடையே நேபாளத்திற்குச் செல்லும் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பிற நாட்டு விமானங்கள்தரையிறங்க நேபாள மன்னர் தடை விதித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சென்ற விமானங்களும் திரும்பி வந்துவிட்டன. அதே போல பிற நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களையும்நேபாளம் ரத்து செய்துள்ளது.
இதற்கிடையே காத்மாண்டு விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்காக 2 இந்தியன்ஏர்லைன்ஸ் விமானங்கள் சிறப்பு அனுமதி பெற்று இன்று இயக்கப்படுகின்றன.
செய்திகளுக்கு சென்ஸார்:
இதற்கிடையே பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்பட்ட செய்திகளையே வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக செல்போன், இன்டர்நெட், ஐ.எஸ்.டி. தொலைபேசி சேவை ஆகியவை இன்றும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பேச்சு சுதந்திரம், அமைதியாக பொது இடங்களில் கூடுதல், கைதிற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவையும் தடைசெய்யப்பட்டுள்ளன.
அரசியல் தலைவர்கள் கைது:
இதற்கிடையே ஏராளமான அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் பலர் தலைமறைவாகி விட்டதாகவும் நேபாளத்தின்முக்கிய எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஷோவகர் பரஜூலி தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை நியமனம் குறித்த மன்னரின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் ஷோவகரின் அறிக்கை வெளியானது. அதில்அவர் கூறியிருப்பதாவது:
அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதும் ஏராளமான அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. குறைந்தது 50 பேராவது கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.
கைது நடவடிக்கை மேலும் தொடர்கிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக நான் உட்பட ஏராளமானோர் தலைமறைவாகியுள்ளோம் என்றார்.
முக்கிய அரசியல் கட்சித் தலவைர்களான நேபாளி காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மற்றும் மாதவ் குமார் நேபால்ஆகியோர் வீட்டுக் காவலிலோ அல்லது சிறைக் காவலிலோ வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாஜ்பாயுடன் மன்மோகன் ஆலோசனை:
இந் நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானிஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பில் நேபாளம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் குறித்து இரு தலைவர்களிடமும் பிரதமர் விளக்கியதாகவும்,டாக்காவில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாடு குறித்து விவாதித்ததாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் எதிர்ப்பு:
இந்தியாவைப் போல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் ஞானேந்திராவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேபாளத்தில் அரசு கலைக்கப்பட்டது அமெரிக்காவிற்கு கவலையளிக்கிறது என்றும், இது ஜனநாயகத்தில் இருந்து விலகிய செயல் என்றும்அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிட்டன், நேபாளத்தில் உடனடியாக அனைத்துக் கட்சி ஜனநாயகம் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கோபி அன்னன் கூறுகையில், மன்னரின் இந்த நடவடிக்கை அமைதியின்மையையோ அல்லது நிலையற்றதன்மையையோ நேபாளத்தில் ஏற்படுத்தக்கூடும் என்றார்.
சர்வதேச மனித உரிமை அமைப்பு, நேபாள மக்களைக் காப்பாற்றவும், அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசுக்குத்தலைமையேற்றுள்ள மன்னரை உலக நாடுகள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சார்க் மாநாடு ரத்து:
இதற்கிடையே நேபாள சம்பவங்களைத் தொடர்ந்து பங்களாதேசில் வரும் 6 ம் தேதி நடைபெற இருந்த சார்க் மாநாட்டில் பிரதமர்மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என வெளியுறவு செயலாளர் ஷாம் ஷரன் அறிவித்தார்.
இதையடுத்து இம் மாநாடே ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சார்க் அமைப்பின் இப்போதைய தலைவர் என்றவகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் நேபாள விவகாரத்துக்காக சார்க் மாநாட்டை இந்தியா ஏன்புறக்கணிக்கிறது என்று புரியவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications