சூடு பிடிக்கிறது மாதவன் தாக்கப்பட்ட வழக்கு: 2வது நாளாக பிரேம்குமார் விசாரணை
நெல்லை:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று இரண்டாவது நாளாக நெல்லையில் எஸ்பி பிரேம்குமார் விசாரணைநடத்தினார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி கோவிலில் சிவன் சன்னதியை ஜெயேந்திரர் அகற்ற உத்தரவிட்டதை எதிர்த்துப்போராடியவர் அர்ச்சகர் மாதவன்.
சென்னையில் வைத்து அவர் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த வழக்கில் ஜெயேந்திரரின் பெயரை சமீபத்தில் தான் சேர்த்தது தமிழகபோலீஸ்.
இந்த வழக்கிலும் தன்னை போலீசார் கைது செய்யலாம் என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர்மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தியுள்ளார் எஸ்பி பிரேம்குமார். நேற்று கூடுதல் எஸ்பி சக்திவேல் உள்ளிட்டபடையினருடன் நெல்லை வந்த பிரேம்குமார் திருக்குறுங்குடி கோவிலில் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தக் குழு இன்றும் திருக்குறுங்குடி மற்றும் வள்ளியூர் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறது. இந்தப் படையில் பெண் இன்ஸ்பெக்டரும்இடம் பெற்றுள்ளார்.
இந்தக் கோவிலின் சிவன் சன்னதி அகற்றப்பட்டது ஏன், அதற்கு உத்தரவிட்டது யார், இதை எதிர்த்தவர்கள் யார், யார், இந்தக் கோவிலின்மேலாளர் முருகேசனின் சமீபத்திய திடீர் மர்ம மரணம் (இவரது உடல் தண்டவாளத்தில் கிடந்தது) ஆகியவை குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தக் கோவிலில் ஜெயேந்திரர் தலையிட்டது குறித்து முருகேசன் தான் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தந்து வந்ததாக தனிப்படைபோலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இந்தக் கொலை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைசென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
அதுவரை ஜெயேந்திரரைக் கைது செய்யவும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.