மகளிர் ஆணைய தலைவரானார் கிரிஜா
டெல்லி:
தேசிய மகளிர் ஆணைய தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவருமான கிரிஜா வியாசும், தேசிய சமூக நல வாரியத் தலைவராக முன்னாள் எம்.பி. ரஜினி பாட்டீலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட பூர்ணிமா அத்வானியின் பதவிக் காலம் கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைடுத்து இந்தப் பதவிக்கு நடிகை ஷபனா ஆஸ்மி, சமூக சேவகி நபீஸா அலி உட்பட பலரது பெயர் அடிபட்டது.
இறுதியில் கிரிஜா வியாஸை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்ந்தெடுத்துள்ளது. இது தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரும்.
கிரிஜா வியாஸ் முன்னாள் மத்திய அமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற கிரிஜா, தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவின் குழுவிற்கு தலைவராக இருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவி, காபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரம் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி பாட்டீல்:
இந் நிலையில் மத்திய சமூக நல வாரியத் தலைவராக முன்னாள் எம்.பியும், சமூக சேவகியுமான ரஜினி பாட்டீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் சமூக நல வாரியத் தலைவராக இருந்த மிருதுளா சின்ஹாவின் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்ததையடுத்து ரஜினி பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இப் பதவியில் நீடிப்பார்.












Click it and Unblock the Notifications