சென்னை பாம்குரோவ் அதிபர் கொலை: அதிமுக பிரமுகர் கைது
சென்னை:
சென்னையின் மிகப் பிரபலமான பாம்குரோவ் ஹோட்டல் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையைச் செய்த அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது பாம்குரோவ் ஹோட்டல். இதன் அதிபர் மாணிக்கராஜ் பலால் (69). கர்நாடகத்தைச் சேர்ந்தவர் பலால். சென்னையில் பல்வேறு இடங்களில் இவர் ஹோட்டல்கள் வைத்துள்ளார்.
நட்சத்திர ஹோட்டலான பாம்குரோவில் தான் கோடம்பாக்கத்தின் பல சினிமா டிஸ்கஷன்கள் நடக்கும். இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா பிரபலங்கள் மாதக் கணக்கில் ரூம் போட்டு கதை விவாதம் நடத்துவதுண்டு.
மிகப் பிரபலமான இந்த ஹோட்டலில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்தபட்ச சம்பளமே கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு கோரி, ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த ஹோட்டலின் ஊழியரும் இங்குள்ள அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவருமான மாயாண்டி ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த மூன்று மாதமாக பலாலுடன் பேச்சு நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தபோது, ஹோட்டல் அதிபர் மாணிக்கராஜ் பலாலுக்கும், அண்ணா தொழிற்சங்க தலைவர் மாயாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் திட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் நேற்றிரவு பலால், ஹோட்டல் சமையல் அறைப் பகுதியைப் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயாண்டி, பலாலை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பலால் மயங்கி விழுந்தார். இதையடுத்து மாயாண்டி தப்பியோடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பலால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
தலைமறைவான மாயாண்டியை போலீஸார் பல இடங்களிலும் தேடி இன்று கைது செய்தனர்.
கொலையான பலால் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். மறைந்த அவரது உடல் இன்று மங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.