வாசன் மத்திய அமைச்சராகிறார்?
டெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு பதவிக்கு வந்தது. இதுவரை மத்திய அமைச்சரவையில்பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இடையில் சிபுசோரண் பதவி விலகினார். பின்னர் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
இந் நிலையில் சில புதிய அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்க்க சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமான நண்பரான கேப்டன் சதீஷ் சர்மா, தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்தியஅமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்யா ஆகியோரது பெயர்கள் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.
வாசன் மத்திய அமைச்சராவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் உறுதியாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரானாலும்கூட தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலும் வாசனே தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, சரிவர செயல்படாத சில அமைச்சர்களை கழற்றி விடவும் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வருகிற 17ம்தேதி வாக்கில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.