தர்மபுரி பஸ் எரிப்பு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னும் 3 நாட்களுக்குள் கண்டுபிடிக்காவிட்டால் வழக்கை சிபிஐ விசாரணைக்குமாற்ற நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துதனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் உச்ச கட்டமாக, தர்மபுரியில், கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு அதிமுகவினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.
தமிழகத்தையே பெரும் கோபத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால்,இவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டிய அரசும், காவல்துறையும் இவர்களைக் காப்பாற்றுதிலேயே கவனம் செலுத்தினர்.
இந்த வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், விசாரணை நேர்மையாக நடக்கவில்லை என்ற புகார்எழுந்தது.
ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக விசாரணை நடந்து வருவதாக கூறி இறந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தைவீராசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடப்பது விசாரணைபோலவே தெரியவில்லை என்று கூறி அரசையும் போலீசாரையும் மிகக் கடுமையாக கண்டித்தார்.
வழக்கை துரிதமாக விசாரிக்க கூறி சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அதை மாற்றி உத்தரவிட்டார். மேலும் அரசு வழக்கறிஞராகசீனிவாசன் என்பவரையும் நீதிபதி கனகராஜே நியமித்தார்.
சேலம் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் கூட வழக்கு விசாரணை தொடங்கவில்லை. அரசு வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தால்அறிவிக்கப்பட்ட சீனிவாசனுக்கு நியமன உத்தரவே வழங்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்து வந்தது.
இந் நிலையில் சிபிசிஐடி, மாநில உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது மாணவியின் தந்தை வீராசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கைதொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும், அதை தேடிக் கொண்டிருப்பதாகவும், இதன்காரணமாகவே விசாரணை தொடங்குவது தாமதமாவதாகவும் சிபிசிஐடி கதை விட்டது.
இதன் மீது இன்று நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தினார். அப்போது முக்கிய ஆவணங்கள் தொலைந்து போய் விட்டதாக போலீசாரேகூறுவது வியப்பாக உள்ளது. இதுபோன்ற முக்கியமான வழக்கில் காவல்துறையும், அரசும் இவ்வளவு அலட்சியமாக இருக்கலாமா?
இன்னும் 3 நாட்களுக்குள் முக்கிய ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டிவரும் என்று கடுமையாக எச்சரித்து விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.