அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
தெஹ்ரான்:
தனது நாட்டின் மீது அமெரிக்க உளவு விமானங்கள் பறந்து கொண்டிருப்பதாகவும், இது தொடருமானால் ஏவுகணைக் கொண்டு அந்தவிமானங்களைத் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இராக்கைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் அணு ஆயுதத்தயாரிப்பை தடுத்து நிறுத்தும் வகையில் அதன் அணு ஆராய்ச்சி மையங்களை அமெரிக்கா தாக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று தெலாம் என்ற இடத்தில் உள்ள ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகே பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை தான் விழுந்து வெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அதை ஈரான் மறுத்துள்ளது. சாலை அமைப்புப் பணிக்காக மலையை வெட்ட குண்டுகள் வைக்கப்பட்டதாகவும் அந்த ஒலி தான்பயங்கரமாக கேட்டதாகவும் அந் நாட்டு உளவுப் பிரிவுத்துறை அமைச்சர் அலி யூனுசி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், எங்கள் நாட்டின் மீது குறிப்பாக அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்க உளவு விமானங்கள் நீண்ட காலமாகவேசுற்றிக் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவை எங்கள் வான் பகுதியில் குறைந்த உயரத்தில் பறக்க முயன்றால் அவற்றைத்தாக்குவோம் என்றார்.
நேற்று ஈரானில் எழுந்த வெடிச் சத்தம் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தான் என்று உலகெங்கும் செய்தி பரவியது. இதனால்அமெரிக்க சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. உலகளவில் பெட்ரோலியத்தின் விலை உயர்ந்தது.
இந் நிலையில் அன்னிய நாட்டுத் தாக்குதலை நாங்கள் இணைந்தே எதிர்கொள்வோம் என ஈரானும் சிரியாவும் கூட்டாக எச்சரிக்கைவிடுத்துள்ளன.