தமிழகத்தை பிரிக்கச் சொல்லும் ஜெகத்ரட்சகன்
கடலூர்:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன் கோரியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிர்வாக வசதிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் தமிழ்நாட்டை இரண்டாகப்பிரிக்க வேண்டும்.
சென்னையைத் தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாடும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு செந்தமிழ்நாடு எனவும் இரண்டாகப்பிரித்தால்தான் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இதை வலியுறுத்தி மதுரையில் பிரமாண்டமான மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பிரிக்கும் எங்களது கோரிக்கையை தொடர்ந்துவலியுறுத்துவோம்.
மைசூர் சிறையில் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து அடைபட்டுள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுனாமி பாதிப்பு எதிர்காலத்தில் கடலோரத் தமிழகத்தைத் தாக்காமல் இருக்கும் பொருட்டு, கடலோரங்களில் தடுப்புச் சுவர் அமைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு வருடம் வரை இலவசமாக டீசல் வழங்க வேண்டும்.
திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை பெரிய பிரச்சினையாக்க தேவையில்லை. ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் மட்டும்தமிழ் கெட்டுப் போய் விடாது. இந்த சிறிய காரணத்திற்காக போராட்டத்தில் குதித்துள்ள ராமதாஸ் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார் ஜெகத்ரட்சகன்.