பங்கு கேட்கும் காங், பாமக: குழப்பத்தில் திமுக
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இனி எந்தத் திராவிடக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவே, அடுத்து தமிழகத்தில்கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என காங்கிஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.
சமீபகாலமாக சோனியாவிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளவர் நாச்சியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இனிமேல் ஜென்மத்துக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்துள்ளது. இதனால்இனிமேல் வெறும் கூட்டணி அமைத்துப் போட்டியிடாமல் ஆட்சியிலும் பங்கேற்கும் ஆசை அந்தக் கட்சிக்கு வந்துவிட்டது.
மத்தியில் தனித்தே ஆட்சியமைத்துப் பழக்கப்பட்ட காங்கிரஸ் இந்த முறை தான் முதல் முறையாக கூட்டணி அரசை அமைத்துள்ளது. இதேபார்முலாவை தான் வீக் ஆக இருக்கும் மாநிலங்களிலும் புகுத்த அக் கட்சி நினைக்கிறது.
தன்னால் ஆட்சியமைக்க முடியாத மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்வதோடு நின்று கொள்ளாமல்அதிகாரத்திலும் பங்கு கேட்கும் ஆசை அந்தக் கட்சிக்கு முளைத்துள்ளது.
முதலில் பா.ம.க. தான் இந்தக் கோரிக்கையை முன் வைத்தது. தமிழகத்தில் இனி அடுத்து கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் என அக்கட்சி கோருகிறது. இப்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து வாசன், இளங்கோவன் ஆகியோரும் இந்தக் கோரிக்கையை மெல்ல எழுப்பஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் தான் சுதர்சன நாச்சியப்பனும் அதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியாவைப் பொறுத்தவரை 1996ம் ஆண்டிலிருந்து மத்தியில் கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது.எதிர்காலத்திலும் இதே நிலைதான் தொடரும். அதில் மாற்றம் இருக்கப் போவதில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் உதவியில்லாமல் எந்தக் கட்சியும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது. 2 எம்.பிக்களை வைத்துள்ளசின்னக் கட்சி கூட மத்திய அமைச்சர் பதவியைப் பெறுகிறது. அப்படி இருக்கையில், மாநில அரசில், தேசிய கட்சியான காங்கிரஸ் பங்குகேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
பிராந்தியக் கட்சிகள் தேசிய அரசில் பங்கு கேட்கும்போது, தேசிய கட்சியான காங்கிரஸ் மாநில அரசில் பங்கு கேட்பதில் தவறே இல்லை.
தமிழக மக்களிடையே முன்பு பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த இந்தித் திணிப்பு, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற பிராந்தியபிரசாரங்கள் எல்லாம் இனி எடுபடாது. மக்கள் தெளிவாகி விட்டனர். தமிழகத்திலும் இனிமேல் கூட்டாட்சிதான் ஏற்பட வேண்டும்.காங்கிரஸும் அதில் பங்கு பெற வேண்டும். அப்படிப்பட்ட கட்சியுடன்தான் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும்.
எங்களது சுய மரியாதைக்கு பங்கம் வந்தால், அதைக் காப்பாற்றத் தேவையான முடிவை எடுக்க காங்கிரஸ் தயங்காது. தமிழகத்தில் 37ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி பதவியை இழந்தது. எனவே நாங்கள் மீண்டும் பதவிக்கு வர ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கமுடியும்? என்றார் நாச்சியப்பன்.
ஏற்கனவே மதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே நெருக்கமான நட்பு இல்லை. திமுக ஆதரவு சன் டிவியில் வைகோவும், மதிமுகவும்முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கருணாநிதி கூப்பிடும் கூட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் போய் வருகிறார்கள், மற்றபடி அவர்களும் திமுகவுடன் நெருக்கமாகஇல்லை. தேர்தலோடு கூட்டணி எல்லாம் முடிந்துவிட்டது என்று பேச ஆரம்பித்துவிட்டது கம்யூனிஸ்ட்.
பாமகவோ திருமாவளவன், சேதுராமன் ஆகியோரைக் கொண்ட தனி அணி அமைத்துக் கெண்டு தனிப் பாதையில் நடைபோட்டுவருகிறது. இந் நிலையில் காங்கிரஸ் கட்சியினரும் தங்களது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருப்பதால் திமுக கவலையில்ஆழ்ந்துள்ளது.
கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ள அதிமுக முன் வந்தால் தனது கூட்டணியை விட்டுக் கூட பா.ம.க. வெளியேறலாம் என்ற சந்தேகம்திமுகவுக்கு உள்ளது. ஆனால், மத்தியில் தனது தயவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் இந்த முடிவுக்கு வராது என திமுக கருதுகிறது.
கூட்டணி ஆட்சிக்குத் தயார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து பா.ம.கவை தன் பக்கம் வளைத்தால், காஙகிரசுக்கு ஆட்சியில் பங்குகொடுக்கத் தயார் என்று திமுகவும் இறங்கி வந்து தான் ஆக வேண்டும்.
கூட்டணிக்கு ஏதாவது ஒரு கட்சியாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அதிமுக, ஆட்சியில் பங்கு என்று சொல்லி பா.ம.கவைஇழுக்க நிறையவே வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications