ஆக்கிரமிப்பு: மதுரையில் பொது மக்கள்- போலீஸ் மோதல்- தடியடியில் பலர் காயம்
மதுரை:
மதுரை செல்லூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது போலீஸார் மீது பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளுக்கு பெயர் போனது மதுரை. வைகை ஆற்றங்கரை, கண்மாய்கள், சாலை ஓரங்களை ஆக்கிரமித்து முன்பு குடிசைமட்டும் போட்டு வந்தவர்கள் இப்போது ஏசி வசதியுடன் கூடிய கல்யாண மண்டபங்கள் வரை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.
தங்களது ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்துவிடாமல் தடுக்க இடையிடையே கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களையும் கட்டி வைத்துக் கொள்வார்கள்.
கண்மாயில் இருந்து செல்லும் ஓடைகளையும் இவர்கள் வீடு கட்டி அடைத்துவிட்டதால், மழை பெய்தால் கண்மாய் நீர் வெளியேறவழியில்லாமல் உடைப்பெடுத்து வீடுகளுக்குள் புகுவது வழக்கம். இதில் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் வீடுகளை விட முறையாகஇடம் வாங்கி, வீடு கட்டியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது.
பல்லாண்டுகளாக சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள்என பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை நகரில் சாலைகள் அகலமாகி வருகின்றன.
மதுரை மாநகராட்சிக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் 12 மாவட்டங்களிலும்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இந் நிலையில் செல்லூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பொது மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல்மூண்டது. செல்லூர், கீழத்தோப்பு பகுதியில் சாலையோரம் இருந்த மாரியம்மன் கோவிலை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கமுயன்றனர்.
இதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். பெண்கள், கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். சில பெண்கள்கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைக்கத் தொடங்கினர்.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் பெரும் போலீஸ் படையுடன் அங்கு வந்தார். கூட்டத்தினரைகலைந்து போகுமாறு அவர் கூறினார். ஆனால் யாரும் நகரவில்லை. மாறாக, பொங்கல் வைத்துக் கொண்டே சில பெண்கள்போலீஸார் மீது கற்களை வீசித் தொடங்கினர்.
இதையடுத்து விஜயக்குமார் தடியடி நடத்த உத்தரவிட்டார். போலீசார் லத்தியை தாறுமாறாக சுழற்றியடிக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து பொங்கப் பானைகளை விட்டுவிட்டு பெண்களும் ஆண்களும் சிதறி ஓடினர். அந்த இடமே கலவர பூமி போலகாணப்பட்டது. அதன் பின்னர் மாரியம்மன் கோவிலை மாநகராட்சி ஊழியர்கள் புல்டோசர் வைத்து இடித்துத்தரைமட்டமாக்கினர்.
அதற்கு முன்னதாக கோவிலில் இருந்து சிலைகளை ஊழியர்கள் பத்திரமாக அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.
கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் பொதுமக்கள் பலரும், கல்வீச்சில் 5 போலீசாரும் காயமடைந்தனர்.