ரவிக்கு மிரட்டல்: சங்கர மட பெண் வழக்கறிஞர்கள் மீது எப்.ஐ.ஆர்.
காஞ்சிபுரம்:
ரவி சுப்பிரமணியத்தை சிறையில் வைத்து மிரட்டியதாக கூறப்படும் பிரச்சினையில் சங்கர மடத்தின் பெண் வழக்கறிஞர்கள் இரண்டு பேர்மீதும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட முக்கிய சாட்சியான ரவி சுப்பிரமணியம், கடந்த மாதம் 24ம் தேதி காஞ்சிபுரம்நீதிமன்ற நீதிபதி உத்தமராஜனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், சங்கர மடத்தின் பெண் வழக்கறிஞர்களான ரேவதி, நசீரா பானு ஆகியோர் தன்னை சிறையில் சந்தித்து கொலை மிரட்டல்விடுத்ததாகவும், ஜெயேந்திரருக்கு ஆதரவாகப் பேசாவிட்டால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என மிரட்டியதாகவும்தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நசீரா பானு, செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இந் நிலையில் ரவி சுப்பிரமணியத்தின்மனைவி சித்ரா சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் ஜெயேந்திரர், சங்கர மட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் பெண் வழக்கறிஞர்கள்ரேவதி, நசீரா பானு ஆகியோர் எனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவின் அடிப்படையில் ரேவதி மற்றும் நசீரா ஆகியார் மீது போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல்உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நசீராவுக்கு முன் ஜாமீன் உள்ளதால், ரேவதி எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இதையடுத்து ரேவதியும் முன்ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரவி சுப்பிரமணியத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரே, ஜெயேந்திரரை மீண்டும்உள்ளே தள்ளுவதற்கான முயற்சி தான் என மடத்தின் பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.