தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் பிசுபிசுப்பு
சென்னை:
வாட் (வேல்யூ ஆடட் டாக்ஸ்) வரி விதிப்பை எதிர்த்து தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகளிடம்போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் போராட்டம் பிசுபிசுத்தது.
வாட் வரி விதிப்பை எதிர்த்து தமிழகத்தில் சில வணிகர் சங்கங்கள் இன்று ஒரு நாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதேபோல நாடுமுழுவதிலும் கடையடைப்பு நடந்தது. இந்த போராட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய வர்த்தக சங்கங்கள் ஆதரிக்கவில்லை.
இந் நிலையில் இப் போராட்டத்துக்கு தமிழக பாஜக ஆதரவு தெரிவித்தது. அக்கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்பேசுகையில், தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வாட் வரியை கடுமையாக எதிர்த்தது காங்கிரஸ். மக்கள்நலனை அதற்குக் காரணமாக காட்டியது.
ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலனை மறந்து விட்டு வாட் வரியை சுமத்தத் துடிக்கிறது. காங்கிரஸின் இந்த இரட்டைவேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கடையடைப்புக்கு பாஜக முழு ஆதரவு தரும் என்றார்.
இதற்கிடையே, தமிழக கடையடைப்புக்கு பல வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் கடையடைப்பு முழு அளவில்நடக்கவில்லை.
தலைநகர் டெல்லியிலும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அகில இந்திய வணிகர்சங்க செயலாளர் பிரவீன் கன்டேல்வால் கூறுகையில், இந்தியா முழுவதும் வாட் வரி விதிப்பை கண்டித்து வணிகர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
மார்ச் 17-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் இந்தியா முழுவதும் வாட் எதிர்ப்புரத யாத்திரை நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications