கூட்டணி ஆட்சி தான்: திமுகவுக்கு இளங்கோவன் பதிலடி
சென்னை:
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான காலம் கனிந்துள்ளதாக மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான இளங்கோவன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி தான் என்பதை போகிற போக்கிலோ திடீரென்றோ நாங்கள் கூறவில்லை. 1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு பல முறை வந்த வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டு விட்டோம்.
ஆனால் இப்போது அதற்கான காலம் கனிந்து விட்டது என்றே நாங்கள் கருதுகிறோம்.
மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறுகிற போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் முடியாது?
தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டுவிட்டு ஆட்சி அமைந்து விட்டால் அதற்குப் பிறகு உதாசீனப்படுத்தப்படுகிறோம். எங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் நடக்கிற போது அதற்கு தலையாட்ட வேண்டியிருக்கிறது.
இதனால் மக்களுக்கு ஏற்படுகிற அதிருப்தியை சமாளிக்க முடியவில்லை. இந்த தர்மசங்கடத்தை போக்க ஒரே வழி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது தான் என்பதை காங்கிரஸ் கட்சியினர் உணர்ந்துள்ளனர்.
ஆனாலும் சோனியாகாந்தி எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு. அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
நாங்கள் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று இப்போது கூறுவதால் அதற்காக தி.மு.க, கூட்டணி பலமிழந்து விட்டதாக அர்த்தமில்லை. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால் காங்கிரஸ் பலமிழந்து விட்டதாக அர்த்தமா?
1980ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தி.மு.கவும், காங்கிரசும் சரி பாதியாக தொகுதியை பிரித்துக் கொண்டன. ஆனால் அதற்குப் பிறகு வந்த தேர்தல்களில் தான் காங்கிரசுக்கு தொகுதிகள் குறைய ஆரம்பித்தன.
தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் சோனியா காந்தி, பிரதமர் ஆகியோரின் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இது மனவருத்தத்தை அளிக்கிறது. இது குறித்து தி.மு.க தலைமையிடம் பேசி சரி செய்யவேண்டும்.
தமிழகத்தில் தனித்தே ஆட்சி என்று தி.மு.க பொதுக்குழுவில் வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழு என்று ஒன்று கூடினால் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும். அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை.
நான் சிறப்பாக செயல்படாத அமைச்சர் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை என் துறை சார்ந்த கோப்புகளும், அதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கூட அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. கட்சிப்பணி செய்யச்சொன்னால் கூட தலைமைக்கு கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications