பீகார்: தேர்தல் வன்முறையில் 7 பேர் பலி
பாட்னா:
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலிலும் வன்முறை வெடித்தது. இதில் 7 பேர் பலியாயினர்.
பீகாரில் 93 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கும் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற தேர்தல் கமிஷன் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இன்றைய தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பிகாரில் சிவான் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பயங்கர குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் வைசாலி, பாட்னா, முஸாபர்பூர் பகுதிகளில் தலா ஒருவர் இறந்தனர். ஜார்க்கண்டில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறப்புப் படை காவலர் கண்ணி வெடியில் சிக்கி இறந்தார்.
இன்றைய தேர்தலில் இரு மாநிலங்களிலும் 50 முதல் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.