சங்கராச்சாரியார் மாதிரியே என்னையும்...: எஸ்.ஏ.ராஜா
டெல்லி:
ஆலடி அருணா கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணை நடக்கிறது.
ராஜா கடந்த ஜனவரி 30ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த 8ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ராஜா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில், நானும் கொலை செய்யப்பட்ட ஆலடி அருணாவும் நீண்ட கால நண்பர்கள். மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்கள். என்னை இந்த வழக்கில் வேண்டுமென்றே போலீஸார் சேர்த்துள்ளனர்.
காஞ்சி சங்கராாச்சாரியார் வழக்கைப் போலவே, எனது வழக்கிலும், பொய்யான ஒருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் என்னைக் கைது செய்துள்ளனர்.
எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ராஜா கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி, நீதிபதிகள் தர்மாதிகாரி, பி.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி ஆஜரானார். இதைத் தொடர்ந்து விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.