பெண் குழந்தைகளுக்கு தென்னங் கன்றுகள்: ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை:
பெண் குழந்தைகளுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் பிறக்கும் பெண்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இரண்டு தென்னங் கன்றுகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி அறிவித்திருந்தார்.
தங்களது வீட்டு நிலத்திலோ அல்லது அருகிலோ இந்த தென்னங் கன்றுகளை வளர்க்கலாம் எனவும் ஜெயலலிதா கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகளில் இந்த கன்றுகள் மரமாகி, ஆண்டுக்கு ரூ. 1000 அளவிற்கு வருவாய் ஈட்டித் தரும் வகையில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை இன்று சென்னையில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவஸ், கனிகாஸ், சிந்து, ஜெசியாள் உள்ளிட்ட 4 பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தலைமைச் செயலகத்திற்கு குழந்தைகளுடன் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தென்னங் கன்றுகளை ஜெயலலிதா வழங்கினார்.
சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 2.9.2004ம் ஆண்டுக்குப் பிறகு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு இந்த இலவச தென்னங் கன்றுகள் வழங்கப்படவுள்ளன.