மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ரூ. 1 கோடி நகையை கொள்ளையடித்த கும்பல் கைது
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே கடந்த ஜனவரி 14ம் தேதி இரவு ரூ. 1கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 16 கிலோ தங்க நகைகள், 3 கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புரசைவாக்கத்தில் நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் தேவராஜ். இவர் கடந்த பொங்கல் தினத்தன்று கொல்கத்தாவில் இருந்து 17.5 கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்திலுருந்து நகைக் கடைக்குச் சொந்தமான ஆட்டோவில் ஏறிக் கிளம்பினார்.
விமான நிலையத்தைத் தாண்டி கத்திப்பாரா சந்திப்பை ஆட்டோ நெருங்கிக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் போலீஸார் போல உடையணிந்த இருவர் ஆட்டோவை மறித்து நிறுத்தினர்.
ஆட்டோ நின்றதும் போலீஸார் போல இருந்த இருவரும் உருட்டுக் கட்டைகளால் தேவராஜைத் தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு பின்னால் வந்த வாகனத்தில் ஏறித் தப்பிவிட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பி. சந்தீப் மித்தல், டிஎஸ்பி சுப்பிரமணியம் ஆகியோரின் மேற்பார்வையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்து.
இந் நிலையில், பூக்கடை பகுதியில் ஒருவர் ஏராளமான நகைகளை விற்க வருவதாக போலீஸாருக்குத தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படையினர் விரைந்து சென்று அந்த நபரை வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் டோலியா என்ற பப்பு என்ற ஜித்தன் எனத் தெரியவந்தது. மீனம்பாக்கம் நகைக் கொள்ளைக் கும்பலில் ஜித்தனும் ஒருவன் என்பது விசாராணையில் தெரியவந்தது. அவனிடமிருந்து அரை கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் சித்து, மகாவீர், வின்சென்ட், சித்தார்த்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பப்புதான் போக்குவரத்த போலீஸ்காரர் போல நடித்தவன். மகாவீர், காக்கி உடை போலீஸாக நடித்தவன்.
அந்த புரசைவாக்கம் நகைக் கடையில் முன்பு சித்து வேலை பார்த்து வந்துள்ளான். கடையின் மேனேஜர் தேவராஜ் கொல்கத்தா சென்று நிறைய நகை வாங்கி வருவதைப் பார்த்த அவன் கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான்.
இந்தக் கும்பலால் பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். நகைகளை விற்று வாங்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இக் கொள்ளைக் கும்பலில் இடம் பெற்றிருந்த சினிமா ஸ்டண்ட் நடிகர் சங்கர், அஷ்ரத் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications