பாஸ்வான் தொடர் பிடிவாதம்: சோனியா சந்திப்பு
டெல்லி:
பிகாரில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் இன்றுடெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, லாலு மற்றும் பாஜகவுக்கு எதிராக கட்சிகளைத் திரட்டி பிகாரில் ஆட்சியமைக்கலாம் என சோனியாவிடம் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கலாம் என்றும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஐக்கியஜனதா தளம் அதை விட்டு வெளியே வந்து தனது கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் முதல்வருக்கு ஆதரவு தரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் லாலுவுக்கு தான் ஆதரவு தரப் போவதில்லை என்றும் பாஜகவின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கமுயலப் போவதும் இல்லை என்றும் சோனியாவிடம் பாஸ்வான் தெரிவித்தார்.
ஆனால், அவர் சொல்வதைப் போல பாஜக கூட்டணியை விட்டு ஐக்கிய ஜனதா தளம் வெளியில் வருமா என்று தெரியவில்லை. அதேபோல லாலுவை ஒதுக்கிவிட்டு பிகாரில் ஆட்சியமைத்தால், மத்தியில் காங்கிரஸ் அரசுக்குத் தந்து வரும் ஆதரவை லாலு வாபஸ்பெற்றுவிடுவார்.
இதனால் மத்தியில் அரசே கவிழும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது யோசனைகள் ஏற்கத்தக்க வகையில் இல்லை என காங்கிரஸ் நினைத்தால் பிகாரில் 2 வருடங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தலாம் என்றும் பாஸ்வான் சோனியாவிடம் தெரிவித்துள்ளார். இதையும் லாலு ஏற்க மாட்டார்.
இதனால் பிகார் விவகாரம் மேலும் விகாரமாகியுள்ளது.
பாஸ்வானின் பிடிவாதம் ஏன்?
இதற்கிடையே பாஸ்வான் இவ்வளவு முரண்டு பிடிப்பது ஏன் என்பது குறித்தும் சில தகவல்கள் வருகின்றன.
தனது சகோதரருக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என அவர் விரும்புவதாகத் தெரிகிறது.
லாலு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் முதல்வராகக் கூடாது, அதற்குப் பதில் வேறு ஒருவர் முதல்வராகலாம், யார் முதல்வரானாலும் தனதுசகோதரருக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என பாஸ்வான் கோருவதாகத் தெரிகிறது.
பிகாரில் பாஸ்வானின் ஆதரவு இல்லாமல் லாலு-காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியோஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுகிறது.
பாஸ்வானுடனான சந்திப்பைத் தொடர்ந்து லாலுவை சோனியா சந்திக்கவுள்ளார்.
இதற்கிடையே லாலுவை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது என ஆளுநர் பூட்டா சிங்கிடம் பா.ஜ.க. மனு கொடுத்துள்ளது.
இந் நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற 4 எம்எல்ஏக்களும்தன்னை ஆதரிப்பதாக லாலு கூறி வருகிறார். ஆனால், இதை அக் கட்சி மறுத்துள்ளது. லாலுவுக்கோ பா.ஜ.கவுக்கோ தாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை என சமாஜ்வாடிக் கட்சி திட்டவட்டமாக இன்று அறிவித்துவிட்டது.
இதற்கிடையே ஆட்சியமைக்க லாலுவுக்கு ஆதரவு தரப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். அவரதுகட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந் நிலையில் ராஷ்ட்ரீய ஜனதாவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மீண்டும் ராப்ரி தேவியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது கட்சிஆட்சி அமைத்தால் ராப்ரியே முதல்வர் என்பதை இதன்மூலம் சுட்டிக் காட்டிவிட்டார் லாலு பிரசாத் யாதவ்.












Click it and Unblock the Notifications