ஜெயலலிதா அமெரிக்கா பயணம்?
சென்னை :
முதல்வர் ஜெயலலிதா ஒரு மாத கால அமெரிக்கா பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் துவங்கவுள்ள நிலையில் அடுத்த மாதம் முதல்வர் அமெரிக்கா செல்வார் என்று தெரிகிறது. மூட்டு வலி, முதுகு வலி பிரச்சனைகளுக்காக வெளிநாட்டில் சிகிச்சை எடுக்க அவர் செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரலில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தபின் முதல்வரின் பயணம் தொடங்குமாம்.
முன்பு, தன்னுடன் சசிகலா, அவரது உறவினர்கள் சிலர், அதிகாரிகள் என 32 பேரை அழைத்துக் கொண்டு லண்டனுக்குச் செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் ஏராளமான அன்னியச் செலாவணியும் முதல்வர் கேட்டதாகவும் அதற்கு மத்திய அரசு மறுத்ததாகவும் முன்பு தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இப்போது 16 பேர் கொண்ட காம்ப்பேக்ட் குழுவுடன் ஜெயலலிதா செல்வார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்குப் பதில் அமெரிக்காவுக்கு ஜெயலலிதா செல்வார் என்று தெரிகிறது.
லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கும் சொத்து குவித்த வழக்கும் பெங்களூர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. அதே தேதியில் தான் சட்டமன்றத்தில் ஜெயலலிதா காவல்துறை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
இதனால் 14ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க நீதிமன்றத்தில் ஜெயலலிதா முன் அனுமதி பெற முயல்வார் என்று தெரிகிறது.