சிபு சோரனுக்கு சிக்கல்: உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி:
ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் வரும் 11ம் தேதியே முதல்வர் சிபுசோரன் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டும் எனஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
81 பேர் கொண்ட சட்டசபையில் 41 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தும் தங்களை ஆட்சியமைக்க அழைக்காமல், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநர் சையத் ராஸியை எதிர்த்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.
ஆளுநரின் செயலால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி கலாம் அவரை நேரில் அழைத்துப் பேசினார். இதையடுத்து பெரும்பான்மையைநிரூபிக்க 21ம் தேதி வரை தரப்பட்ட கால அவகாசத்தை குறைத்த ஆளுநர், வரும் 15ம் தேதியே முதல்வர் சிபுசோரன் பெரும்பான்மையைநிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந் நிலையில் பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி லோஹாத்தி தலைமையிலான 3நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தனது தீர்ப்பில்,
15ம் தேதிக்குப் பதில் வரும் 11ம் தேதியே சிபுசோரன் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதுவரை அவையில்ஆங்கிலோ-இந்திய எம்.எல்.ஏ யாரையும் நியமிக்கக் கூடாது (இவரது வாக்கை வைத்து ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற முயற்சி நடப்பதைத்தடுக்க).
11ம் தேதி அவையை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும், பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் அதை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாகஎடுத்துக் கொள்ளும். அன்றைய தினம் அவை நடவடிக்கை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டெடுப்பு முடிந்த பின் அதன் விவரத்தை இடைக்கால சபாநாயகர் நியாயமாகவும், நேர்மையாகவும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும். வீடியோவையும் சமர்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிப்பதை தலைமைச் செயலாளரும் டிஜிபியும் உறுதி செய்ய வேண்டும்.
சிபு சோரன் முதல்வராக்கப்பட்ட விதம் குறித்து பாஜக கிளம்பியுள்ள சந்தேகங்கள் ஏற்புடையதாகவே உள்ளதால் இந்த இடைக்கால உத்தரவுபிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக இன்று ஆல்பிரட் ஜார்ஜ் ரொசாரியோ என்பவரை ஆங்கிலோ-இந்திய எம்எல்ஏவாக சிபுசோரன் அரசு நியமித்தது. இவருக்கும்வாக்களிக்கும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
81 பேர் கொண்ட அவையில் 41 பேரின் ஆதரவு இருப்பதாக பாஜக கூறுவதால், மிச்சம் உள்ள 40 பேருடன் ஆங்கிலோ-இந்தியஎம்எல்ஏவையும் சேர்த்து தனக்கும் 41 எம்எல்ஏக்களைத் திரட்ட சிபுசோரன் திட்டமிட்டார்.
ஆனால், சட்டசபையில் பெரும்பான்மை நியமிக்கப்படும் வரை ஆங்கிலோ-இந்திய எம்எல்ஏ நியமனத்தை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதற்கிடையே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் 5 சுயேச்சைகளில் 2 பேரின் குடும்பத்தினர், அவர்கள் பாஜகவினரால்கடத்தப்பட்டுள்ளதாக போலீசிடம் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.