பாஜகவிலிருந்து பங்கராப்பா ஓட்டம்
டெல்லி:
கூடுவிட்டு கூடு பாய்வது மாதிரி கட்சி விட்டு கட்சி தாவுவதில் நிபுணரான கர்நாடக மாஜி முதல்வர் பங்கராப்பா பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இன்று தனது லோக்சபா எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடியவர் தான் இந்த பங்காரப்பா. மதக் கலவர ஸ்பெஷலிஸ்டான நரேந்திர மோடிக்கெல்லாம், முன்னோடியாக தனது மாநிலத்தில் காவிரிக் கலவரத்தை இவரே தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்.
இதில் அப்பாவித் தமிழர்கள் பலர் பலியானாலும், காங்கிரஸ் கட்சியில் பங்காரப்பாவின் அரசியல் களம் பலமானது.
ஆனால், அடுத்து வந்த மாற்றங்களால் பங்கராப்பா காங்கிரஸ் கட்சியில் ஒதுக்கப்பட்டார். இதனால் தனிக் கட்சி தொடங்கினார். ஆனால் அதையும் நெடு நாட்கள் நடத்த முடியவில்லை.
இதையடுத்து பாஜகவுக்குப் போனார். ஆனால், அங்கும் அவரை வளரவிடவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவரை முதல்வராக முன்னிறுத்த அக் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான அனந்த்குமார் விடவில்லை.
இதனால், பாஜகவில் இருந்து கொண்டே அக் கட்சியை வசை பாடி வந்தார். தானாக இவர் வெளியேறட்டும் என்று நினைத்த பாஜகவும் இவரைக் கண்டு கொள்ளவில்லை.
மீண்டும் காங்கிரசில் இணைய பகீரத முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், ஏற்கனவே பல முறை காங்கிரஸை விட்டு ஓடிப் போய் திரும்ப வந்த இவரை இம்முறை உள்ளே சேர்க்க மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் தயாராக இல்லை.
இதனால் சமீபகாலமாக காங்கிரஸையும் திட்டிக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி நினைவுக்கு வர, இப்போது அதில் போய் சேர்ந்துள்ளார். இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற தனது ஷிமோகா தொகுதி எம்பி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
72 வயதான பங்கராப்பாவுக்கு சமாஜ்வாடிக் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications