நெல்லை: மீண்டும் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் பகுதியில் இன்று அதிகாலையும் கடல் நீர் உள்ளே புகுந்ததால் மக்களிடையே பெரும் பீதிநிலவி வருகிறது.
டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்குதலுக்குப் பிறகு கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிக்கடி கடலில் சீற்றம்தென்படுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.
இந் நிலையில் சுனாமி பீதி ஓய்ந்து கொண்டுள்ள நேரத்தில், நேற்று மாலை திடீரென நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தின் பலமீனவ கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. நேற்று காலை முதலே நெல்லை மாவட்டத்தின் பெருமணல், கன்னியாகுமரிமாவட்டம் ஆழிக்கல், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆயிரங்கால்பொலிமுகம், கோவளம் ஆகிய ஊர்களில் கடல் சீற்றத்துடன்காணப்பட்டது.
நண்பகலுக்கு மேலும் பெருமணல் கிராமத்தில், பெரிய அலைகள் வீசத் தொடங்கின. மாலைக்கு மேல் கடல் நீர் உள்ளே வரத்தொடங்கியது. பெருமணல் கிராமத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் ஊடுறுவியது. இதனால் 2 கான்க்ரீட் வீடுகள் இடிந்தன,சில கட்டுமரங்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பெருமணல் கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று பயந்தபொதுமக்கள் அங்கிருந்து ஓடி மேடான பகுதிகளை தஞ்சமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த், ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் விரைந்துவந்து பார்வையிட்டனர். பொதுமக்களிடம் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதேபோல குமரி மாவட்டத்திலும் கடல் நீர் உட்புகுந்ததால் பெரும் பீதி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டுவெளியேறினர். கணபதிபுரத்தில் உள்ள 100 குடும்பங்களும் அப்பகுதியை காலி செய்து விட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் இது சுனாமி அலை அல்ல என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது.இது சாதாரண கடல் சீற்றம்தான். சுனாமிக்குப் பிறகு கடலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில் இந்த சீற்றம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையோரப் பகுதிகளில் கடல் மண் குறைவாக உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் மண் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் பாலிவால்.
ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் தென்னந் தோப்புகளிலும் கடல் நீர் புகுந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடல்நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தென்னந்தோப்புகளில் கடல் நீர் புகுந்ததில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கொச்சியிலும் கடல் மட்டம் உயர்ந்தது. இதனால் கடலோரம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்அங்கிருந்து வெளியேறினர்.
இந் நிலையில் நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியில் இன்று காலை மீண்டும் கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் ஊருக்குள்உள்ளவர்கள் மேடான பகுதிக்கு விரைந்தனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தங்களது கட்டு மரங்களை பாதுகாப்பானஇடங்களுக்கு அவர்கள் கொண்டு சென்று விட்டனர்.
மணப்பாறை, தூத்துக்குடி, புன்னக்காயல், காயல்பட்டினம், உவரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications