மோடி: இந்திய-அமெரிக்க உறவில் சிக்கலில்லை
வாஷிங்டன்:
மோடிக்கு விசா மறுக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட விவகாரம் தான். இரு நாட்டு உறவுகளுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஆடம் எரேலி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின்கோரிக்கையே ஏற்று விசா வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்வதாக முதலில் அமெரிக்கா கூறியது.
ஆனால் மோடிக்கு விசா வழங்க முடியாது என்று நேற்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஆடம் எரேலி கூறுகையில், இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது என்பதை மறுக்க முடியாது.
குஜராத் முதல்வர் மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான விவகாரம் ஒரு தனிப்பட்ட விஷயமாகும். இதில் இரு நாட்டுஉறவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விசா வழங்குவது என்பது இந்தியா-அமெரிக்க உறவு வளையத்திற்குள் வருவது அல்ல.அமெரிக்காவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு குஜராத் மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளது. ஏனென்றால் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர்இங்கு பல முக்கியமான துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
மாதம் தோறும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர்க்கு விசா வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு விசா மறுக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அறிந்தோம். ஆனால் அந்த அரசுஆட்சியில் இருக்கும் போது தான் அமெரிக்க - இந்தியா இடையே கூடுதல் நட்புறவு ஏற்பட்டது என்றார்.