மழை பெய்யுது: நீதிமன்றம் வராத ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்திடம் இன்று ஜெயேந்திரர் முன்னிலையில் காஞ்சிநீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருந்தது. ஆனால், மழையைக் காரணம் காட்டி ஜெயேந்திரர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
அவர் அளித்த அப்ரூவர் வாக்குமூலம் குறித்து இன்று விசாரணை நடக்க இருந்தது. இதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர்,சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உட்பட 25 பேரும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தனர்.
ஆனால், இன்று நீதிமன்றம் கூடியதும் ஜெயேந்திரர், விஜயேந்திரர் சார்பில் வழக்கறிஞர் சண்முகம் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், காஞ்சிபுரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இரு சங்கராச்சாரியார்களும் சிறப்பு பூஜை நடத்தவேண்டியுள்ளது. இதனால் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
விஜயேந்திரர் மனு:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி விஜயேந்திரர், உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் சென்னையில் தங்கியிருக்கவேண்டுமென்றும், வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2 மாதங்களாக விஜயேந்திரர் சென்னையில் தங்கியிருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந் நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டுமென்று கோரி, அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications