ரவியிடம் நாளை ஜெயேந்திரரின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்திடம் நாளை ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணைநடத்தவுள்ளனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்ததது. அப்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் வி.பாலசுந்தரம்,
அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளார் என்றார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். குற்றவாளி எண் 5 (அப்பு), தெலுங்கில் குற்றப் பத்திரிக்கைநகலைக் கேட்டுள்ளார். அது வழங்கப்பட்ட பிறகு தான் விசாரணையைத் தொடங்க முடியும் என்றார்.
அப்போது அரசு வழக்கறிஞர் பாலசுந்தரம் நீதிபதி உத்தமராஜனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், 1967 முதல் 74 ம் ஆண்டு வரை சென்னை தியாகராஜா உயர் நிலைப் பள்ளியில், தமிழை முதல்பாடமாக எடுத்து அப்பு படித்துள்ளார். இதை உறுதி செய்து பள்ளி தலைமை ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரேம்குமாரிடம் சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ராஜரத்தினம், மனுவாகத்தான் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் அரசு வழக்கறிஞர் கடிதத்தை தாக்கல் செய்கிறார். இதை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றார்.
அப்புவின் வழக்கறிஞர் லட்சுமண ரெட்டியார் கூறுகையில், போலீஸார் இதுவரை தாக்கல் செய்தள்ள ஆவணங்களின் பட்டியலைஎங்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் என்னென்ன தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியும்.விசாரணையின்போது புதிதாக போலீஸார் எதையாவது தாக்கல் செய்தால் அது விசாரணையை பாதிக்கும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக மோதினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி உத்தமராஜன், வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு அரசு வழக்கறிஞரான பாஸ்கரன் எழுந்து, ரவி சுப்பிரமணியத்தின் குறுக்கு விசாரணைதேவையில்லாமல் தாமதமாகி வருகிறது. எதிர்த் தரப்பு வழக்கறிஞற்கள் மாறி மாறி ஏதாவது ஒரு மனுவைத் தாக்கல் செய்துவருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு விசாரணை நடைபெறும் எனவும் அப்போது ரவி சுப்பிரமணியத்தைஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் நீதிபதி அறிவித்தார்.