தர்மபுரி: இன்னொரு மாணவியும் கண்ணீர் சாட்சியம்
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இன்று சாட்சியம் அளித்த இன்னொரு மாணவி காயத்ரியும் பஸ்சில் பெட்ரோல் ஊற்றிய அதிமுகதொண்டரை அடையாளம் காட்டினார்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவேபேராசிரியைகள், மாணவர்கள், மாணவிகள்,பஸ் டிரைவர், க்ளீனர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, தீக்காயமடைந்த ப்ரீத்தா என்ற மாணவி நீதிபதி கிருஷ்ணராஜாவிடம் நேற்று கண்ணீருடன் சாட்சியம் அளித்தார்.பேருந்தின் மீது பெட்ரோல் ஊற்றிய, மாது என்ற ரவிக்குமாரை கதறி அழுதபடி அடையாளம் காட்டினார்.
இந் நிலையில் இன்று மற்றொரு மாணவி காயத்ரி சாட்சியம் அளித்தார்.
தற்போது கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வரும் இவரிடம் அரசு சிறப்புவழக்கறிஞர் சீனிவாசன் நடந்த சம்பவம் குறித்து கேள்விகள் கேட்டார்.
அதற்கு அவர், சுற்றுலா புறப்பட்ட நாள் முதல் பஸ்சிற்கு தீ வைக்கப்பட்டது வரை நடந்த சம்பவத்தை விளக்கமாக கூறினார். பஸ்சின்முன்பக்கம் வழியாக பெட்ரோல் ஊற்றிய மாது என்ற ரவீந்திரன் மற்றும் நெடு என்ற நெடுஞ்செழியன் ஆகியோரை அவர் அடையாளம்காட்டினார்.
அப்போது நெடுஞ்செழியன் அணிந்திருந்த சாம்பல் நிற சட்டையையும் அவர் அடையாளம் காட்டினார்.
பஸ் எரிக்கப்பட்ட போது அதில் சிக்கிக் கொண்ட தனது 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது என்றும் தீயில் தனது பணம் மற்றும் ரூ.10,000ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து விட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து காயத்ரியை குற்றவாளிகள் தரப்பிலான வழக்கறிஞர் பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் கூறியது:
தர்மபுரியில் பஸ் நின்ற பிறகு சுமார் 1 மணி நேரம் நேரம் கழித்து ஒரு ஊர்வலம் சென்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.அதுவரை அனைவரும் பஸ்சுக்குள் அமர்ந்திருந்தார்கள். நான் பார்சல் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து விட்டேன்.
பிறகு எங்களது பஸ் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரோடு ஓரத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதன் பிறகு தான் பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது. தீ மளமளவென பிடித்த போது நான் முன் வாசல் வழியாக தப்பித்து வெளியே வந்து விட்டேன்.
பஸ்சினுள் இருந்த மாணவிகளை பின்பக்க படிக்கட்டுக்கு மேலே உள்ள ஷட்டர் வழியாக மாணவர்கள் வெளியே இழுத்துப் போட்டார்கள்.நீண்ட நேரம் கழித்து தான் 3 மாணவிகள் கருகி இறந்தது எனக்கு தெரியும் என்றார்.
சுமார் 1 மணி நேரம் காயத்ரியிடம் வழக்கறிஞர் பார்த்தசாரதி குறுக்கு விசாரணை நடத்தினார். விசாரணையின் போது இடையிடையேகாயத்ரி கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் ஒரு அரசு வழக்கறிஞர் நியமனம்:
இதற்கிடையே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவ மேலும் ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். இதற்கு தகுதியானநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கு மனு செய்ய 15ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தப் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் தகுதியின்அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
புதிய வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு வழக்கு விசாரணை நடைபெறும் சேலம்
நீதிமன்றத்திலும், வழக்கறிஞர் சங்கத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.