சேலம் சிறைக்கு ரகு திடீர் மாற்றம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயேந்திரரின் தம்பி ரகு,திடீரென சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல, கதிரவன் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
13வது எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரம் சமீபத்தில் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் ரகுவும்,கதிரவனும் திடீரென சென்னை சிறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
ரகு சேலம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல, கதிரவன் திருச்சிசிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ரகுவும், கதிரவனும் திடீரென வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை சிறை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.இருப்பினும் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்குள் ஏதோ "கசமுசா" நடந்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்தே வேறுசிறைகளுக்கு அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.