ஆசிரியை மீனாட்சி வழக்கு: சிபிசிஐடி போலீஸ் மீது மீண்டும் புகார்!
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு தொடர்பாக, மீனாட்சியின் குடும்பத்தினரை மிரட்டியும், சித்திரவதைசெய்தும் சிபிசிஐடி போலீஸார் பொய் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் 6 மாதங்களாகிறது. இந்த வழக்கை மதுரைஉயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீனாட்சி கடத்தப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு முடிவு செய்தது. இதற்கான ஆதாரத்தைத்தேடும் பணியிலும் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். வருகிற 27ம் தேதி இந்த வழக்கில் இறுதி அறிக்கையை சிபிசிஐடிபோலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மீனாட்சி காணாமல் போனது தொடர்பாக அவர்களது உறவினர்களை சிபிசிஐடி போலீஸார் மீரட்டியும்,துன்புறுத்தியும் பொய் வாக்குமூலம் கொடுக்குமாறு வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆசிரியை மீனாட்சியின் மைத்துனர் பசுபதியின் கடையில் வேலை பார்த்து வரும் சந்திரசேகர் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில்,என்னை சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தார்கள்.
எனது இரு கால்களுக்கு கீழேயும் கடுமையாக அடித்து, அவர்கள் கூறியதுபோல வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தினர்.
இதேபோலவே, மீனாட்சியின் உறவினர்கள் பலரிடம் போலீஸார் சித்திரவதை செய்து பொய்யான வாக்குமூலத்தைப்பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.
மீனாட்சி காணாமல் போன வழக்கில், ஆரம்பத்திலிருந்தே போலீஸாரின் விசாரணை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிவந்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையும், குளித்தலை போலீஸாரின் விசாரணையை கடுமையாக விமர்சித்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் தற்போதும் அதேமாதிரியான புகார்கள் கிளம்பியுள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.