"மாரியப்பனை சாந்தப்படுத்திய "கமலா!
திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்குப் பிடித்திருந்த மதத்தை கட்டுப்படுத்த கமலா என்ற பெண் யானை,மாரியப்பனுடன் விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாரியப்பன் சாந்தமாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி அருகே உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்கு புதன்கிழமை காலை மதம் பிடித்தது.இதையடுத்து மாரியப்பனை கொட்டகைக்குள் வைத்துப் பூட்டினர். பூட்டிய கொட்டகைக்குள் யானை அட்டகாசம் செய்து வந்தது.
டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழு, புதன்கிழமை இரவு முழுவதும் போராடி மாரியப்பனுக்கு மயக்கமருந்து செலுத்தி மயக்கமடையச் செய்தனர்.
இதையடுத்து தனியார் ஒருவடமிருந்து கமலா என்ற பெண் யானையை வரவழைத்த டாக்டர்கள், அந்த யானையைமாரியப்பனுடன் பழக விட்டனர். பெண் யானையைப் பார்த்ததும் மாரியப்பனுக்கு குஷியாகி விட்டது. மதம் குறைந்து,சாந்தமடைந்தது.
தற்போது மாரியப்பன் யானை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பாகன் சுகுமார் கூறுவதை கேட்கிறது. யானைக்கு ஏராளமானகரும்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
யானைக்குப் பிடித்த மதம் குறித்து கோவில் இணை ஆணையர் அசோக் கூறுகையில், பெண் யானையுடன் உறவு கொள்ளாதகாரணத்தால் தான் மாரியப்பனுக்கு மதம் பிடித்துள்ளது. கமலா யானையைப் பார்த்தவுடன் மாரியப்பனுக்கு மதம் குறைந்துவிட்டது.
மாரியப்பன் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டதால் சமயபுரத்தில் மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன. கோவிலுக்கும்பக்தர்கள் வழக்கம் போல வர ஆரம்பித்தனர்.