தூத்துக்குடி, திருச்செந்தூரில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் திடீரென கடலில் கொந்தளிப்பு காணப்பட்டது, ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
சுனாமி அலை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மக்கள் மனதிலிருந்து மீளாத நிலையில் தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்பதும்,திருச்செந்தூரில் அடிக்கடி கடல் உள் வாங்குவதுமாக பீதியூட்டும் நிகழ்வுகள தொடர்ந்து வருகின்றன.
இந் நிலையில் நேற்று மாலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தூத்துக்குடி கடற்கரைச்சாலையில் உள்ள இனிகோ நகரில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கடலில் ராட்சத அலை எழுந்து கடல் நீர் கொந்தளித்தது.
அதே போல திரேஸ்புரம், விவேகானந்தா காலனி, ரோச்புரம், கக்குளம் ஆகிய இடங்களிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.கடல் நீர் புகுந்த இனிகோ நகருக்கு அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதேபோல, திருச்செந்தூரிலும் கடல் அலைகள் வேகமாக எழுந்தன. கடல் மட்டம் வழக்கத்தை விட 2 அடி மேலெழுந்தது.இதனால் திருச்செந்தூருக்கு வந்த பக்தர்களும், உள்ளூர் மக்களும் அச்சத்துடன் கடலின் மாற்றத்தைப் பார்த்து மிரண்டனர்.
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியிலும் நேற்று அலைகள் வேகமாக இருந்தன. பெளர்ணமி காரணமாக அலைகளின் உயரம்அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.