குண்டாஸ்: அய்யர், ரகு விடுதலை- தமிழக அரசுக்கு மூக்குடைப்பு
சென்னை:
சங்கர மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இதனால் நினைத்தபோதெல்லாம் நினைத்தவர்களையெல்லாம் குண்டாசில் அடைத்து வந்த தமிழக அரசுக்கும், தமிழக போலீசாருக்கும்சரியான மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 24 பேரில், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன் உள்ளிட்ட 16 பேர் குண்டர்சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது மனுக்களை விசாரித்து வந்த நீதிபதி கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள்கூறுகையில்,
இந்த 11 பேரும் வெளியில் இருந்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும், அமைதி குலையும் என்பதால் தான் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டதாக அரசுத் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. அதற்கான முகாந்திரங்களும் இல்லை.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்குப் போதுமான ஆதாரங்களை சமர்பிக்க போலீஸ் தரப்பு தவறிவிட்டது.
மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் வைக்கும் அளவிற்கு இவர்கள் மீது குற்றங்கள் இல்லை. இந்தக் கைது நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். எனவே குண்டர் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டது செல்லாது.
எனவே இவர்களை குண்டர் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறையாக இருந்தாலும் கூட, இன்றே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு,மடத்தின் கணக்குகளைத் திருத்தியது ஆகிய வழக்குகளில் இவர்கள் சிறையிலேயே தொடர்ந்து இருந்தாக வேண்டும்.
ஆனால், குண்டர் சட்டத்தில் ஜாமீனில் கிடைக்காது. இதனால் அதில் விடுதலையாகிவிட்டால் பிற வழக்குகளில் எப்படியாவது ஜாமீன்பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இவர்கள் உள்ளனர். இதனால் தான் முதலில் குண்டர் சட்டக் கைதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து,அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்த 11 பேரையும் குண்டர் சட்டத்திலிருந்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளதால், இவர்களைப் போலவே கைது செய்யப்பட்ட மற்ற 5பேரும் தங்களையும் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை விரைவில் அணுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாப்பாடு சரியில்லை:
இதற்கிடையே, சேலம் மத்திய சிறையில் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு தரம் குறைந்ததாக உள்ளதாக ரகு புகார் கூறியுள்ளார்.
வேண்டுமென்றே தனக்கு தரம் குறைந்த சாப்பாடு தரப்படுவதாக கூறியுள்ள ரகு, சிறையில் தனக்கு முதல் வகுப்பு அளிக்கப்பட வேண்டும்என்று கோரி சேலம் சிறைக்கு வந்த டிஐஜி எஸ்ராவிடம் மனு கொடுத்தார்.
இந்த 11 பேரையும் குண்டர் சட்டத்திலிருந்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளதால், இவர்களைப் போலவே கைது செய்யப்பட்ட மற்ற 5பேரும் தங்களையும் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை விரைவில் அணுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.