ஜெயலட்சுமி: சிபிஐ போட்ட வழக்கு- ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை:
4 வழக்குகளில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், ஜெயலட்சுமிக்கு இன்று குற்றப் பத்திரிக்கை நகல்வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீதிபதி வராததால் ஜூன் 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
போலீஸார் மீது சரமாரியான புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையின் முடிவு ஜெயலட்சுமிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஜெயலட்சுமி செய்த மோசடிகள் மற்றும் போலீஸ் பெயரைக் கூறி அவர் செய்த மோசடிகளின் அடிப்படையில் மதுரை தலைமைக்குற்றவியல் நீதிமன்றத்தில் 4 வழக்குகளை சிபிஐ தொடர்ந்து அதில் குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்தது.
ஆனால், அவரை பாலியல் பலாத்காரம் செய்த 20 காக்கிகள் விஷயத்தை சிபிஐ அப்படியே விட்டுவிட்டது.
இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 420ன் கீழ் ஜெயலட்சுமி மீதே சிபிஐ சார்பில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்தக் குற்றப்பத்திரிகைகளில் ஜெயலட்சுமி தவிர இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலட்சுமி உள்ளிட்டோருக்கு இன்று குற்றப் பத்திரிக்கை நகல்கள்வழங்கப்படுவதாக இருந்ததது. இதற்காக ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
ஆனால் நீதிபதி அய்யாசாமி வராததால் வழக்கு ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று அவருக்குகுற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரி ஜெயலட்சுமி தாக்கல்செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
இந்த 4 வழக்குகள் தவிர தாராபுரம், திருச்சி நீதிமன்றங்களில் தலா 1 வழக்கும் ஜெயலட்சமிக்கு எதிராக உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. அந்த வழக்குகளிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இந் நிலையில் சிபிஐ இந்த விஷயத்தில் போலீசாரை காக்கும் போக்கில் செயல்பட்டுள்ளதாகவும், இதில் மறு விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக ஜெயலட்சுமி கூறியுள்ளார்.