காசு வாங்கிய வாக்காளர்கள்: கருணாநிதி எரிச்சல்
சென்னை:
இடைத் தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி, கோடிகளை செலவிட்டதால்தான் என்று வெற்றி பெற்றவர்களுக்கும்,அவர்கள் கொடுத்த காசை வாங்கிய வாக்காளர்களுக்கும் நன்கு தெரியும் என்று திமுக தலைவர் கருணாநதி கூறியுள்ளார். கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்.
அதில், திமு கழக உடன் பிறப்புகளுக்கும், நமது கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைகாணிக்கையாக்கிடவே இந்த அறிக்கை வெளியிடுகிறேன்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஏற்கனவே தங்கள் வசம் இருந்த இடங்களைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.
தேர்தல் விதிகளை மீறி, ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அரசாங்க பணத்தையே செலவிட்டு இருதொகுதிகளிலும் வசதிகள் செய்திட, சில கோடி ரூபாய்களை செலவழித்தும் போதாமல்,
அடிப்பது போல் அடி, நாங்கள் அழுவது போல அழுது எங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம் என்ற சூழ்ச்சியில்ஈடுபட்டும், இந்த வெற்றியை அதிமுகவால் பெற முடிந்தது என்ற உண்மை வாக்களித்தவர்களுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் அவர்களை வாழ்த்துகிறவர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்பது நமக்கும் தெரியும்.
100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஒவ்வொரு வாக்காளருக்கும் கொடுத்தே இந்த வெற்றியை அவர்களால் பெறமுடிந்திருக்கிறது.
ஜனநாயக கடமையாற்ற இரு தொகுதிகளிலும் இரவு, பகல் பாராது அயராது உழைத்திட்ட நமது முற்போக்கு அணியின் செயல்வீரர்கள் அனைவருக்கும் இந்த அணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த பெருமக்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியைக்கூறுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications