பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலம் முறைகேடு! நடந்தது என்ன? டைம்லைனுடன் விளக்கிய அமைச்சர் ரமேஷ்!
சென்னை: பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலம் முறைகேடு புகாரில் நடந்தது என்ன என்பதை இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.

மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2-ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பழனி முருகன் கோயில் நில முறைகேடு வழக்கில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை இணைத்து சமூகவலைதளங்களில் சில அவதூறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக ரமேஷின் உதவியாளர் சென்னை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்,
விசாரணையில் அவதூறு தகவல்களை பரப்பியது 3 பேர் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து போலீஸார் வினோத் சூர்யகுமார் என்பவரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.















Click it and Unblock the Notifications