ரகு, அய்யருக்கு ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு
சென்னை:
சங்கரராமன் கொலையாளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்ததற்கு ஆதாரம் இருப்பதால் ரகு, சுந்தரேச அய்யர்உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி வாதாடினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் தங்களை ஜாமீனில் விடக்கோரி ரகு, சுந்தரேச அய்யர், சின்னா, கதிரவன், மீனாட்சி சுந்தரம்ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துளசி, அரசு குற்றவியல் வழக்கறிஞர் துரைசாமி, சிறப்பு அரசு குற்றவியல்வழக்கறிஞர் ஜெயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், ஏற்கனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
5 பேர் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டு சாதாரணமானது தான். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே இவர்களுக்கு ஜாமீன்வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து துளசி வாதிடுகையில், விசாரணை முடியாத கட்டத்தில் ஜெயேந்திரருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இப்போது விசாரணை முடிந்து விட்டது. அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
அவரை குறுக்கு விசாரணை செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி விட்டோம். இப்போது ரவிசுப்பிரமணியம் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வேண்டுமென்றால் மனுதாரர்கள் தரப்பில் இந்த நீதிமன்றத்தில் வாதம்செய்யலாம்.
முக்கிய ஆதாரங்கள் உள்ளன:
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது சிஆர்பிசி 164 பிரிவின் படி தந்த வாக்குமூலம் மட்டுமே இருந்தது.மேலும் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்குவதை கருத்தில் கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது.
எனவே உச்ச நீதிமன்றம் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி இங்கு வாதிட முடியாது.
மேலும் பணம் கொடுக்கல் வாங்கலுக்கு ஆதாரமாக டெலிபோன் பேச்சுக்கள் உள்ளன. ரவி சுப்பிரமணியம் கொடுத்து கதிரவன்மூலம் லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்ததற்கு எழுத்து மூலமாக ஆதாரங்கள் உள்ளன.
ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே 5பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.