கருணாநிதி பிறந்த நாள்: தயாராகிறது திமுக!
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் 82வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி தனது 82வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக இந்த முறை எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாட கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தலைவர்கள், தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெறுகிறார். பின்னர் பகல் 1 மணிக்கு வீடு திரும்பும் கருணாநிதி ஓய்வுக்குப் பின் மாலை 3 மணியளவில் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் (ராஜாத்தி அம்மாளின் வீடு) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
மாலை 6 மணிக்கு அண்ணா நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதற்கு முன்னதாக கருணாநிதி எழுதிய வான் புகழ் வள்ளுவம் என்ற நூல், ஜூன் 2ம் தேதி கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அன்பழகன் தலைமை தாங்க, முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைச்சாமி நூலை வெளியிட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.
கருணாநிதியின் மகள் கனிமொழி நூல் அறிமுக உரையாற்றுகிறார். துரைமுருகன் வரவேற்றுப் பேசுகிறார். கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார். கருணாநிதி ஏற்புரையாற்றுவார்.
அதே 2ம் தேதி காலை திமுக தலைமை செயற்குழுக் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைத் தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்து வரவுள்ள பொதுத் தேர்தலில் மேற்கொள்ளப்படவேண்டிய உத்திகள் குறித்தும் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.