சுயமரியாதை திருமணம்: மத்திய அரசு விரைவில் சட்டம்- கருணாநிதி
சென்னை:
சுயமரியாதைத் திருமணங்களுக்கு தேசிய அளவிலும் விரைவில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உறுதிமொழியை பிரதமர் மன்மோகன் சிங்அளித்துள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் திமுக தொண்டர் ஒருவரது இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:
ஆண்டுதோறும் இதுபோல நூற்றுக்கணக்கான திருமணங்களை என் வீட்டு வாசலிலேயே நடத்தி வைக்கிறேன்.
எமர்ஜென்சி காலத்தில் பலர் சிறையில் இருந்தனர். என்னை மட்டும் கைது செய்யாமல் விட்டிருந்தனர். அப்போது கூட வெளியூரில் இருந்து கழகத் தோழர்கள்மொட்டை போட திருப்பதி போகிறோம், வட பழனி போகிறோம் என்று போலீசாரிடம் பொய் சொல்லிவிட்டு என்னிடம் வந்து சீர்திருத்த முறைப்படி திருமணம்செய்தவர்களும் உண்டு.
இந்த இயக்கம் பல கஷ்-நஷ்டங்கள், சோதனை-வேதனைகளையும் தாண்டி இன்றும் உயிரோடு இருப்பதற்கு அத்தகைய சுயமரியாதை உணர்வு கொண்ட வாலிபர்கள்தான் காரணம்.
அண்ணாவை நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியதால் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டமயமாக்கப்பட்டன. இந்தத் திருமண முறை தமிழகத்தில் மட்டுமல்ல தேசியஅளவிலும் விரைவில் சட்டமாகப் போகிறது.
அதற்கான உறுதிமொழியை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடமும் நான் பெற்றிருக்கிறேன்.
ஒரு காலத்தில் தமிழகத்தின் குக்கிராமத்தில் கூட அனுமதிக்கப்படாத இந்தத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி சட்டப் பாதுகாப்புப் பெற இருப்பது என்வாழ்நாளில் பெற்ற பெரும் வெற்றியாக நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications