மைசூர்: மாட்டு வண்டியில் மின்சாரம் தாக்கி 7பேர் பலி
மைசூர்:
மைசூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியானார்கள்.
கடந்த 2 தினங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் மின் கம்பி அறுந்து விழுந்து பஸ்சில் இருந்த 11பயணிகள் இறந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் நடந்து 2 தினங்களுக்குள் இதே போல ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
மைசூர் அருகே உள்ளது பெலிகரே கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த 7 பேர் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மாட்டு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு மின் கம்பி அறுந்து மாட்டு வண்டியின் மீது விழுந்தது. இதனால் மாட்டு வண்டியில் இருந்த 7பேரின்மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேருமே இறந்தனர். மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளில் ஒன்று மட்டும்உயிர் பிழைத்தது.