அரசியலில் இருந்து விலக அத்வானிக்கு விஎச்பி "அட்வைஸ்
ஹரித்வார் & சென்னை:
இந்துக்களின் நம்பிக்கைத் துரோகியான அத்வானி, அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று ஹரித்துவாரில் நடைபெற்ற விஎச்பி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
முகமது அலி ஜின்னா விவாகரம் தொடர்பாக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த அத்வானி பின்னர் அதை வாபஸ் பெற்றார். ஆனால் அத்வானிக்கு விஎச்பிஉட்பட பல இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்துக்களின் நம்பிக்கைத் துரோகியான அத்வானி, பாஜக தலைவர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எம்.பி.பதவிகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகவேண்டும். பாகிஸ்தானில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிய அத்வானி, இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஎச்பி பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறுகையில், பாகிஸ்தான் மண்ணில் அத்வானி இந்தியாவை புண்படுத்தி விட்டார். மேலும் அவர்தனது நிலையில் பிடிவாதமாக இருந்து வருகிறார். அவருக்கு தற்போதுள்ள ஒரே வாய்ப்பு அரசியலில் இருந்து சன்னியாசம் வாங்கிக் கொள்வது தான் என்றார்.
இதற்கிடையே விஎச்பியின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் கூறுகையில்,பாஜகவிற்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்று பாஜக தான் தீர்மானிக்கும். இதில் தலையிட விஎச்பிக்கு எந்த உரிமையும் இல்லை.
இதனால் விஎச்பியின் இந்த கோரிக்கையை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. அவர்கள் அவர்களது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்.
அத்வானியின் தலைமையில் பாஜக நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. கட்சி வற்புறுத்தியதால் தான் அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இதில் எந்த நாடகமும்இல்லை.
இந்த விவகாரம் முடிந்து போன அத்தியாயம். இனிமேல் யாரும் அதை மீண்டும் கிளற வேண்டாம் என்றார் நாயுடு.