அமெரிக்கா அருகே கடலுக்கடியில் மாபெரும் பூகம்பம்: சுனாமி இல்லை
கிரசண்ட் சிட்டி:
அமெரிக்காவின் கலிபோர்னியாவை ஒட்டிய கடல் பகுதியில் இன்று மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்தபூகம்பத்தால் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்தக் கடலடி பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 7.0 என்ற அளவுக்குப் பதிவானது. இது மிகச் சக்தி வாய்ந்த பூகம்பம் என்பதால், கலிபோர்னியாவை ஒட்டிய பசிபிக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டது.
கலிபோர்னியா-மெக்ஸிகோ எல்லை, வான்கூவர் தீவுகளின் வட பகுதி, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், பூகம்பகம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் பெரிய அளவில் அலைகள் ஏதும் உருவாகாததால் அந்த எச்சரிக்கையை அமெரிக்க அரசு வாபஸ்பெற்றுவிட்டது.
கலிபோர்னியா அருகே உள்ள கிரசண்ட் சிட்டியில் 1964ம் ஆண்டில் சுனாமி அலைகள் தாக்கி 11 பேரைப் பலி கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications