மசூதி இடிப்பு: அத்வானியை விடுவித்தது தவறு- அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு
லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 8 பேரை ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது தவறு என்றும், வருகின்ற 28ம்தேதி அவர்கள் ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போதைய பாஜக தலைவர்அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கு ரேபபேலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உமா பாரதி உட்பட 8 பேரையும் ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து ஹாஜி மெகபூப் மற்றும் ஹாஜி முகமது சித்திக் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததுதவறு என்றும்,
அவர்கள் அனைவரும் வரும் 28ம் தேதி ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் இன்றுஉத்தரவிட்டுள்ளது.