ராமேஸ்வரம்: ஜெயேந்திரரின் நன்கொடையும் நிராகரிப்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் நுழைய ஜெயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் போல, சங்கரமடம் வழங்கிய நன்கொடையையும் கோவில் நிர்வாகம் நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டது.
தொடர்ந்து 2 நாட்கள் முயன்றும் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய ஜெயேந்திரருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந் நிலையில், ராமநாதசுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா வருகிற 30ம் தேதி தொடங்குகிறது.விழாவையொட்டி கோவில் நிர்வாகம் நன்கொடை வசூலிப்பது வழக்கம். நன்கொடை கொடுப்போரின் பெயர்கள் திருவிழாஅழைப்பிதழில் இடம் பெறும்.
வழக்கமாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் காஞ்சிபுரம் சங்கர மடம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நிலைமைமாறியுள்ளது. காஞ்சி மடத்திற்குப் பதில் சிருங்கேரி சங்கர மடத்தின் பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது.
ஜெயேந்திரரின் பெயரும் இடம் பெறவில்லை. இது குறித்து சங்கர மடத்தைச் சேர்ந்த சுந்தரவாத்தியார் என்பவர் கூறுகையில்,ஆடித் திருக்கல்யாணத்திற்கு நாங்கள் வழக்கமாக நன்கொடை வழங்குவோம். கோவிலிலிருந்து வந்து வாங்கிச் செல்வார்கள்.ஆனால் இந்த ஆண்டு இதுவரை யாரும் வரவில்லை.
நாங்களாக கோவிலுக்கு சென்று வழங்க முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் கொடுத்த நன்கொடையை வாங்க கோவில்நிர்வாகிகள் மறுத்து விட்டனர். எதற்காக மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை என்றார்.
ராமேஸ்வரம் கோவிலில் தொடங்கியுள்ள இந்த ஜெயேந்திரர் மற்றும் சங்கர மட புறக்கணிப்பு தமிழகத்தின் மற்றகோவில்களிலும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.