மேட்டூர் அணை இன்று மாலை திறப்பு! ஜெ. உத்தரவு
சென்னை:
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கன அடி நீர் இன்றுமாலை 6 மணி முதல் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் உணவு உற்பத்திக்கு அடிப்படை ஆதாரமாக திகழும் காவிரிபாசனப் பகுதி சாகுபடிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த மாதம் 26ம் தேதி நான் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, காவிரிப் பாசனப் பகுதிவிவசாயத்திற்காக தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்து விட ஆணையிடுமாறு கேட்டுக் கொண்டேன்.
ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் விவசாயப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என்றும்பிரதமரிடம் கோரினேன். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அமைச்சர்கள் குழு பெங்களூர் சென்று கர்நாடகமுதல்வர் தரம்சிங்கை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தியது.
இந் நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,பெருமளவு உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையில் 102.08 அடி அதாவது 68.52டிஎம்சி அளவுக்கு நீர் உள்ளது.
மேலும் தொடர்ந்து நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய பாசனப் பகுதி மாவட்டங்களில்சம்பா சாகுபடியை விரைவில் தொடங்க வசதியாக இன்று (4ம் தேதி)மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையைத் திறக்கஉத்தரவிட்டுள்ளேன்.
விநாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்கவும், தினமும் ஒன்றரை டிஎம்சி நீரை திறந்து விடவும் பொதுப்பணித்துறையினருக்குஆணையிட்டுள்ளேன். சாகுபடி தேவைக்கேற்ப திறக்கப்படும் தண்ணீரின் அளவை முறைப்படுத்திக் கொள்ளும்படியும்பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பான முறையில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளுமாறு விவசாயிகளைக்கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.